கோட்டக்குப்பம் அருகே கடல் அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

கோட்டக்குப்பம் அருகே நண்பர்களுடன் கடலில் குளித்த ஆந்திராவை சேர்ந்த கல்லூரி மாணவர் ராட்சத கடல் அலையில் சிக்கி பரிதாபமாக செத்தார்.

Update: 2018-07-09 21:45 GMT
வானூர்,  

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் யாதபாளையத்தை சேர்ந்தவர் ராமசேஷய்யா. இவருடைய மகன் அர்ஷா (வயது 20), இவர் பி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 6-ந் தேதி அர்ஷா தனது நண்பர்கள் 3 பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். இங்கு ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். நேற்று முன்தினம் மாலை அவர்கள் புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு நண்பர்கள் 4 பேரும் கடலில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று மாணவர் அர்ஷாவை, இழுத்துச் சென்றது. அதனைப் பார்த்ததும் அவருடன் குளித்துக்கொண்டிருந்த மற்ற நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து போராடி மீட்டு அர்ஷாவை மயங்கிய நிலையில் கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அர்ஷா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்