மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் பட்டதாரி வாலிபர் கட்டையால் அடித்துக்கொலை

மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் பட்டதாரி வாலிபர் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீசார், மேலும் 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-09 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மகன் தேவா (வயது 21). பி.ஏ. பட்டதாரியான இவர் கபடி வீரர் ஆவார். இவர் நேற்று முன்தினம் இரவு ரெங்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ராமச்சந்திரன்(24), கதிர்(23) ஆகியோ ருடன் பாளையத்திற்கும்- ரெங்கநாதபுரத்திற்கும் இடையே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது 3 பேருக்கும் இடையே தகராறு ஏற் பட்டது. இதனால் ராமச்சந்திரன் தனது கிராமத்துக்கு சென்று, மேலும் 4 பேரை அழைத்து வந்தார். பின்னர் ராமச்சந்திரன், கதிர் உள்பட 6 பேரும் சேர்ந்து, தேவாவை கட்டையால் அடித்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த தேவா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தேவாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவரது குடும்பத்தினர் தேவாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவா, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தேவாவை அடித்துக்கொலை செய்ததாக ராமச்சந்திரனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கதிர் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்