போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீசை மானபங்கம் செய்த போலீஸ்காரர்

போலீஸ் நிலையத்திலேயே போலீஸ்காரர் ஒருவர் பெண் போலீசை மானபங்கம் செய்த அதிர்ச்சி சம்பவம் புனேயில் நடந்துள்ளது.

Update: 2018-07-09 22:14 GMT
புனே,

புனே மார்க்கெட் யார்டு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருபவர் போலீஸ்காரர் சீத்தாராம்(வயது45). இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணியில் இருந்தார். சீத்தாராம் இரவு 12 மணியளவில் போலீஸ்நிலையத்தில் அவருடன் பணியில் இருந்த 26 வயது பெண் போலீசிடம் பாலியல் ரீதியாக பேச தொடங்கி உள்ளார். இதற்கு அந்த பெண் போலீஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். எனினும் அவர் கண்டு கொள்ளாமல் பெண் போலீசை தொட்டு மானபங்கம் செய்து உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே சென்று உள்ளார். எனினும் போலீஸ்காரர், பெண் போலீஸ் வெளியே செல்வதை தடுப்பது போல கையை பிடித்து மானபங்கம் செய்தார்.

இந்தநிலையில் சத்தம்கேட்டு போலீஸ்நிலையத்தின் மற்றொரு அறையில் இருந்த போலீஸ்காரர் வெளியே வந்தார். அவர் பெண் போலீசை சீத்தாராமிடம் இருந்து மீட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், போலீஸ்காரர் சீத்தாராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நிலையத்திலேயே பெண் போலீஸ் சக போலீஸ்காரரால் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்