முன்னாள் காதலனின் சகோதரிகள் படத்தை ஆபாசமாக ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட இளம்பெண் கைது

முன்னாள் காதலனை பழிவாங்க அவரது சகோதரிகளின் படத்தை ‘பேஸ்புக்’கில் ஆபாசமாக வெளியிட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-09 22:38 GMT
மும்பை,

மும்பை மேற்கு புறநகர் பகுதியை சேர்ந்த அக்காள், தங்கை வில்லேபார்லே போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், சமூக வலைதளத்தில் மர்மநபர் ஒருவர் தங்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், செல்போன் எண்ணை பரப்பி அவதூறு ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கோரேகாவ் பகுதியை சேர்ந்த ஆர்த்தி (வயது22) என்ற இளம்பெண், போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி சகோதரிகளின் ஆபாச படத்தையும், அவர்களின் செல்போன் எண்ணையும் பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.

ஆர்த்தியும், அவர் ஆபாச படங்களை பரப்பிய பெண்களின் சகோதரனும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் அந்த வாலிபர் ஆர்த்தியுடனான தொடர்பை துண்டித்துவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆர்த்தி முன்னாள் காதலனை பழிவாங்க அவரது சகோதரிகளின் ஆபாச படத்தை ‘பேஸ்புக்’கில் பரப்பியது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்