காதலிக்கு திருமணம் நடந்த மண்டபம் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசியில் காதலிக்கு திருமணம் நடந்த மண்டபத்தின் முன்பு வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-10 22:00 GMT
வந்தவாசி, 

சென்னை பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (வயது 28), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.

இந்த நிலையில் அப்பெண்ணுக்கும் வந்தவாசியைச் சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வந்தவாசியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சம்பவத்தன்று திருமணம் நடைபெற்றது.

இதுபற்றி தகவல் அறிந்த சந்துரு வந்தவாசிக்கு வந்தார். பின்னர் காதலியின் திருமணம் நடைபெற இருந்த திருமண மண்டபத்திற்கு முன்பு சென்று தன் மீது மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துக் கொண்டார்.

உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறி துடித்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சந்துரு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சந்துருவின் தந்தை ஆறுமுகம் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்