நந்திவரத்தில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை

நந்திவரத்தில் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-10 21:30 GMT

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (29), பெயிண்டர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் இவரது மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டுக்கு வருமாறு மனைவியை வினோத்குமார் அழைக்கும் போது நிரந்தரமாக குடியை நிறுத்தினால் தான் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன் என்று சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த வினோத்குமார் கடந்த 28–ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்