திரு.வி.க. அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்பை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-10 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் கிடாரங்கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பஸ் பாஸ் உடனடியாக வழங்க வேண்டும். மாணவர் அமைப்பினர் போராட்டங்களை நடத்த கூடாது என கல்லூரி நிர்வாகம் விதித்த தடையை கண்டித்தும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திட கோரியும், கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் நகர செயலாளர் சுர்ஜித், ஒன்றிய செயலாளர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்