வீட்டில் கோழி மேய்ந்ததால் தகராறு: தாய்-மகள் உள்பட 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு

அந்தியூர் அருகே வீட்டில் கோழி மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் தாய்-மகள் உள்பட 3 பெண்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒரு பெண்ணின் பல் உடைந்தது.

Update: 2018-07-10 22:00 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் (வயது 53). விவசாயி. இவருடைய மனைவி சரோஜா (48). இவர்களுடைய மருமகள் நந்தினி (22).

அதே பகுதியில் 64 வயது மூதாட்டி, அவருடைய மகள் மற்றும் 18 வயது பேத்தி ஆகியோர் வசித்து வருகிறார்கள். நேற்று மூதாட்டியின் கோழி ஒன்று சின்ராஜ் வீட்டில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூதாட்டியிடம், சரோஜா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சரோஜாவுக்கும், மூதாட்டிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் சரோஜாவுக்கு ஆதரவாக மருமகள் நந்தினியும், மூதாட்டிக்கு ஆதரவாக அவருடைய மகள், பேத்தி ஆகியோரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சின்ராஜும், மூதாட்டியிடம் சண்டை போட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மூதாட்டி, அவருடைய மகள், பேத்தி ஆகியோர் சேர்ந்து சின்ராஜை கல்லால் தாக்கியதாக தெரிகிறது. இதனால் சின்ராஜுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே சின்ராஜ், தான் வைத்திருந்த அரிவாளால் மூதாட்டி, அவருடைய மகள், பேத்தி ஆகியோரை வெட்டினார்.

இதில் மூதாட்டிக்கு கையிலும், அவருடைய மகளுக்கு தாடையிலும், பேத்திக்கு உள்ளங்கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. தாடையில் வெட்டு பட்டதால் மூதாட்டியின் மகளுக்கு பல் உடைந்தது.

உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்த சின்ராஜ், மூதாட்டி, அவருடைய மகள் மற்றும் பேத்தியை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூதாட்டி, அவருடைய மகள் மற்றும் பேத்தி ஆகியோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து 2 தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்