6 தாசில்தார் அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

6 தாசில்தார் அலுவலகங்களில் விவசாய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

Update: 2018-07-10 23:00 GMT
தஞ்சாவூர்,

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை ஒன்றியக்குழு சார்பில் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் அபிமன்னன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில், வீட்டுமனை இல்லாத அனைவருக்கும் உடனே வீட்டுமனையை தமிழகஅரசு வழங்க வேண்டும். பல ஆண்டு காலமாக கோவில், மடம், அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களிலும், தரிசு நிலங்கள், நத்தம் புறம்போக்கு நிலங்களிலும் குடியிருந்து வருவோருக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

அரசால் வீட்டுமனைக்கு இடம் தேர்வு செய்து கையகப்படுத்தியும், இதுவரை வீட்டுமனை இல்லாதவர்களுக்கு அந்த இடத்தை அளந்து ஒப்படைக்கவில்லை. எனவே கையகப்படுத்தப்பட்ட இடத்தை அளந்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் வீட்டுமனை வழங்க, சுடுகாட்டுக்கு பாதை அமைக்க, தையல் எந்திரம் வழங்க நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இந்த நிதி, பயனாளிகளுக்கு சென்றடையவில்லை. நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டம் காலை 11.05 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. பின்னர் நிர்வாகிகள் சிலரை அழைத்து தாசில்தார் அருணகிரி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நீர் நிலைகளில் வீட்டுமனை கொடுக்க முடியாது. எங்கெங்கு புறம்போக்கு நிலம் இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்த்து தகுதியானவர்களுக்கு வீட்டுமனையும், ஏற்கனவே குடியிருக்கும் மனைக்கு பட்டாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த தகவலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர் களிடமும் தாசில்தார் அருணகிரி தெரிவித்ததுடன் அவர்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். மொத்தம் 250 மனுக்கள் வழங்கப்பட்டன. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் மனோகரன், ஒன்றிய செயலாளர் மாலதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சரஸ்வதி, மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணிசாமி, ஒன்றிய தலைவர் நாகலிங்கம், ஒன்றிய பொருளாளர் விஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சையை போல பேராவூரணி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகத்திலும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்