சிறுமியை கடத்திய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
நெல்லை அருகே சிறுமியை கடத்திய திருமணமான கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள தருவையை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அவர், அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி குழந்தைகளை விட்டு விட்டு, அந்த சிறுமியுடன் அவர் தலைமறைவாகி விட்டார்.
அவரை மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில் சிறுமியை மீட்டு ஒப்படைக்குமாறு, அந்த சிறுமியின் குடும்பத்தினர் சார்பில் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியையும், கடத்தி சென்ற தொழிலாளியையும் தீவிரமாக தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த தொழிலாளியையும், அந்த சிறுமியையும் நெல்லை அனைத்து மகளிர் போலீசார் பிடித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மீராள்பாணு, அந்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமியை போலீசார் மீட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.