பல்லடம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பல்லடம் அருகே குடிநீர் வழங்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-07-10 22:51 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே சித்தம்பலம் அங்கு உள்ள ஆதிதிராவிடர் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அப்பகுதியில் கடந்த பல நாட்களாக வீட்டு இணைப்பு குழாய்களில் அத்திக்கடவு குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விலைகொடுத்து லாரியில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் வசதியற்றவர்கள் குடிநீருக்காக வெகு தொலைவு சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய அவல நிலை இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் காலிக்குடங்களுடன் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்பு அலுவலகத்தில் இருந்த கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியிடம் பொதுமக்கள் அனைவரும் குடிநீர் வழங்கக்கோரி தாங்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் சித்தம்பலம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்புகளில் அத்திக்கடவு குடிநீர் சரிவர வினியோகம் செய்வதில்லை.

ஆகவே சீரான முறையில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கந்தசாமி, அப்பகுதி மக்களிடம் மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. அதை சரி பார்த்து வருகிறோம். மின் மோட்டார் சரியானவுடன் உங்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்