ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய ஆசாமி கைது

ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-10 23:04 GMT
அவினாசி,

ஆபாச படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவியின் தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக கடந்த 5-ந்தேதி அவினாசி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.

அப்போது அவினாசியை அடுத்த பழங்கரை சாந்திநகரை சேர்ந்த முரளிதரன் (வயது 47) என்பவர் மொபட்டில் அங்கு வந்தார். பின்னர் அவர், தனது மொபட்டை நிறுத்தி விட்டு, அந்த மாணவியிடம் சென்று “ உனக்கு தோஷம் உள்ளது, இதனால்தான் உனது தந்தை இறந்து விட்டார், தாயும் விரைவில் இறந்து விடுவார், எனவே உன் செல்போன் எண்ணை கொடு, அதற்கான பரிகாரத்தை மாலையில் கூறுகிறேன்” என்றார். இதனால் பயந்து போன அந்த மாணவி தனது செல்போன் எண்ணை முரளிதரனிடம் கொடுத்தார்.

இதையடுத்து அன்று மாலையில் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்ட முரளிதரன், “ பெருமாநல்லூரில் உள்ள ஒரு கோவிலுக்கு தினமும் சென்று தீபம் ஏற்று, அதே போல் வீட்டிலும் தீபம் ஏற்று ” எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி கல்லூரி மாணவியை மீண்டும் தொடர்பு கொண்ட முரளிதரன்,“ நான் சேவூரில் இருக்கிறேன். உன்னை பற்றிய ஏராளமான ஆபாச படங்கள் என்னிடம் உள்ளது. எனவே சேவூர் வந்து அந்த ஆபாச படங்களை வாங்கி சென்று விடு. மேலும் 2 போலீசார் வருவார்கள். அவர்களுடன் சிறிது நேரம் தனியாக இருந்து விட்டு வா. இல்லை என்றால் உன்னை விபசார வழக்கில் கைது செய்து விடுவார்கள். மேலும் உன்னுடைய ஆபாச படங்களை சமூக வலைத் தளத்தில் வெளியிடுவேன்” என்று மிரட்டி உள்ளார். இதனால் அந்த மாணவி செய்வது அறியாமல் அழுது கொண்டே தனது தாயாரிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார், அவினாசி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளிதரனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதி என்றும், தற்போது அவினாசியை அடுத்த பழங்கரை சாந்திநகரில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்