நாங்குநேரி அருகே வாலிபர் படுகொலை: அண்ணன் சங்கரன்கோவில் கோர்ட்டிலும் தம்பி ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டிலும் சரண்

நாங்குநேரி அருகே நடந்த வாலிபர் படுகொலையில் அண்ணன் சங்கரன்கோவில் கோர்ட்டிலும், தம்பி ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

Update: 2018-07-11 21:00 GMT

நாங்குநேரி, 

நாங்குநேரி அருகே நடந்த வாலிபர் படுகொலையில் அண்ணன் சங்கரன்கோவில் கோர்ட்டிலும், தம்பி ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டிலும் சரண் அடைந்தனர்.

வாலிபர் கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் சுப்பையா (வயது 24). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அதிகாலை ஊருக்கு அருகே ஜீயர்குளம் காலனி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்ததும் நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுப்பையாவின் உடலை கைப்பற்றி நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

போலீசாரின் விசாரணையில், சுப்பையா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர்களான சுடலைக்கண்ணு (45) ஆகிய இருவரும் சேர்ந்து நம்பியாற்றில் மணல் கொள்ளையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்களுக்கு இடையே தொழில் போட்டி ஏற்பட்டு தகராறாக மாறியது. மேலும் சுடலைக்கண்ணுவின் சகோதரர் ஆறுமுகம் (37) என்பவரும் மணல் கடத்தல் வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கு காரணம் சுப்பையா என நினைத்து அவர் மீது அண்ணன், தம்பி இருவரும் ஆத்திரம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில் சுப்பையா அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சுடலைக்கண்ணு, ஆறுமுகம் ஆகிய இருவரும் தலைமறைவாகினர்.

அண்ணன்–தம்பி கோர்ட்டில் சரண்

இச்சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பி இருவரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் சுடலைக்கண்ணு சங்கரன்கோவில் கோர்ட்டிலும், ஆறுமுகம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டிலும் நேற்று சரண் அடைந்தனர். அவர்கள் இருவரிடமும் நீதிபதி விசாரித்து, இருவரையும் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்