மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது: தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி கடல் பகுதியில் மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கடல் பகுதியில் மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் விசைப்படகுகள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
எச்சரிக்கை
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 250 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகள் மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த சில வாரங்களாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடி கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும், கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும், இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருந்தது.
தொடர்ந்து தூத்துக்குடி மீன்வளத்துறை அதிகாரிகள், அனைத்து மீனவ கிராமங்களையும் தொடர்பு கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.
கடலுக்கு செல்லவில்லை
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி கடல் பகுதியில் மணிக்கு சுமார் 82 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் அலைகள் உயரமாக எழுந்தன. கடல் லேசான சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 250 விசைப்படகுகளும் நேற்று கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.