ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதும் முறையை தமிழக அரசு எதிர்க்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2018-07-11 21:00 GMT
கோவில்பட்டி, 

ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு எழுதும் முறையை தமிழக அரசு எதிர்க்கிறது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

‘நீட்’ தேர்வு 

மக்களின் உணர்வுகளை பொறுத்துதான் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி உள்ளது. இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், அங்கு வேலை செய்தவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் தனியாக இணையதளத்தை தொடங்கி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுற்று வட்டார பகுதிகளில் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டதோ, அதனைவிட சிறப்பான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தரும்.

‘நீட்’ தேர்வு தமிழில் எழுதியவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் பிழைகள் இருந்ததால், அவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது. ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு எழுதும் முறையை தமிழக அரசு எதிர்க்கிறது.

இழப்பீட்டு தொகை 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.

சேலம்–சென்னை இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நிலம் வழங்கியவர்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உரிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்