மாமனாருக்கு கத்திக்குத்து; மருமகன் உள்பட 2 பேர் கைது

காரைக்குடி தகராறில் மாமனாரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மருமகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-11 22:15 GMT

காரைக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருபவர் காதர்பாட்ஷா. இவருடைய மூத்த மகள் அஜீஷாபேகம். இவருக்கும் காரைக்குடி அருகே சாக்கோட்டை போலீஸ் சரகம் பீர்க்கலைக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல்ஹமீது என்பவருக்கும் திருமணம் நடைபெற்று தற்போது 2 குழந்தைகள் உள்ளனர்.

அப்துல்ஹமீது சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் கணவன்-மனைவிஇடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து புதுவயல் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் காதர்பாட்ஷா தரப்பினர் கூட்டத்தை விட்டு வெளியேறினர். இதனால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அப்துல்ஹமீதும் அவருடைய தரப்பினரும் காதர்பாட்ஷா மற்றும் அவருடைய மகன் முகமதுஇஷாக்கான், மைத்துனர் அக்பர் ஆகியோரை தரக்குறைவாக பேசி அவர்களை தாக்கினர்.

மேலும் காதர்பாட்ஷாவுக்கு கத்தி குத்து விழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் அப்துல்ஹமீது உள்பட 9 பேர் மீது சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்துல்ஹமீது, நத்தர் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்