ஸ்ரீமுஷ்ணம் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஸ்ரீமுஷ்ணம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-07-11 21:45 GMT
ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை சாவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோழத்தரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நாராயணசாமியின் மனைவி வேம்பு ஸ்ரீ முஷ்ணம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், எனது கணவர் நாராயணசாமிக்கும் அதேஊரை சேர்ந்த மகாராஜன் மகன் தமிழ்செல்வன் என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக தமிழ்செல்வன், மதுபாலன், தமிழழகன், குபேந்திரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து எனது கணவரை தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த எனது கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்