நீலகிரி மலைப்பகுதியில் விடிய விடிய மழை: பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது

நீலகிரி மலைப்பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது.

Update: 2018-07-11 23:00 GMT
பவானிசாகர்,

பவானிசாகர் அணை தென்இந்தியாவின் மிகப்பெரிய மண் அணை ஆகும். நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து வரும் மோயாறும் கலக்கும் இடமே பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறும், சகதியும் 15 அடி போக மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், பவானி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் வாய்க்கால் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அதுமட்டுமின்றி ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை உள்ளது.


பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டியது. இதன்காரணமாக அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.

நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.92 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 286 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கன அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரத்து 326 கன அடியாக அதிகரித்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.80 அடியை தொட்டது. ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 200 கன அடியும், வாய்க்காலுக்கு 5 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை விரைவில் எட்டிவிடும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்