அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றம் போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை

பரமத்தி வேலூரில் வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.

Update: 2018-07-12 22:30 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் பள்ளிசாலை, திருவள்ளுவர் சாலை, காவிரி சாலை மற்றும் பஸ் நிலைய பகுதிகளில் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனை மற்றும் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் செல்லும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று மாலை பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா தலைமையில் ஊழியர்கள், பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் மற்றும் வாகனங்களில் இருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றினர்.

இரு சக்கர வாகனங்கள்

இதுகுறித்து பரமத்தி வேலூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நித்யா கூறும் போது, ‘இருசக்கர வாகனங்களில் உள்ள அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் சைலன்சர்களை விரைவில் அகற்றப்படும்’ என்றார். மேலும், பரமத்தி நகருக்குள் செல்லாத அரசு பஸ் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் சேலத்தில் இருந்து பள்ளப்பட்டி நோக்கி சென்ற அரசு பஸ் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி இனிவரும் காலங்களில் பரமத்தி நகருக்குள் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். 

மேலும் செய்திகள்