தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் காயம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது. 2 குழந்தைகள் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2018-07-12 23:14 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே மடப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மனைவி செல்வி. இவருடைய குடிசை வீட்டில் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அப்போது காற்று வேகமாக வீசவே அருகில் இருந்த கல்வராயன், சுப்பிரமணி, ராஜா, வீரபத்திரன் ஆகியோரின் குடிசை வீடுகளுக்கும் தீ பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதையறிந்ததும் வீடுகளில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து குடிசை வீடுகளின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருவெண்ணெய் நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாஸ்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 5 குடிசை வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது.

மேலும் வீடுகளில் இருந்த டி.வி., கட்டில், பீரோ, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களும், துணிமணிகளும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் மொத்த சேத மதிப்பு ரூ.8 லட்சமாகும்.

தீ விபத்தில் கல்வராயன் மற்றும் அவரது மகன் தீனா(வயது 5), மகள் தீபிகா(3) ஆகியோர் தீக்காயம் அடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்