பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து: எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக நெல்லை கோர்ட்டு உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் 9-ந் தேதி நெல்லை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

Update: 2018-07-13 07:58 GMT
நெல்லை, 

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் 9-ந் தேதி நெல்லை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.

மனுதாக்கல்

நெல்லை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகி ஒருவர் கடந்த 20-4-2018 அன்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “பெண் பத்திரிகையாளர் பற்றி முகநூலில் அவதூறான தகவல்களை பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

மாஜிஸ்திரேட்டு உத்தரவு

இந்த வழக்கு விசாரணை நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘எஸ்.வி.சேகர் சென்னையில் ஒரு வழக்கு சம்பந்தமாக கோர்ட்டில் ஆஜராக வேண்டி உள்ளது. இதனால் இங்கு ஆஜராகவில்லை‘ என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ், நடிகர் எஸ்.வி.சேகர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்