வைரத்தின் மதிப்பை கூடுதலாக காண்பித்து ரூ.2 ஆயிரம் கோடி மோசடி

மும்பையில் வைரத்தின் மதிப்பை கூடுதலாக காண்பித்து ரூ.2 ஆயிரம் கோடி மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-13 23:00 GMT

மும்பை,

மும்பை பாந்திரா குர்லா வளாகத்தில் தரக்குறைவான வைர கற்களை மதிப்பை உயர்த்தி காட்டி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ரூ.156 கோடி என மதிப்பிடப்பட்ட வைரக்கற்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பின்னர் அவற்றை அதிகாரிகள் பரிசோதித்தபோது அவை வெறும் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புடைய இரண்டாம் தர வைரக்கற்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம், காசோலைகள், பான்கார்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

கைதான 4 பேரும் ஹாங்காங், துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரக்குறைவான வைரக்கற்களை இறக்குமதி செய்து அவற்றுக்கு போலியாக சான்றிதழ் தயாரித்து மதிப்பு கூட்டி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி வரை இந்த மோசடி நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்