கல்லூரிகளில் பகவத் கீதை வினியோகம் குறித்து சர்ச்சை

கல்லூரிகளில் பகவத் கீதை வினியோகிக்க உத்தரவிட்ட விவகாரம் தொடர்பாக கல்வி மந்திரி வினோத் தாவ்டே விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-07-13 23:42 GMT
நாக்பூர்,

மும்பை பகுதி உயர்கல்வி துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடந்த 11-ந் தேதி ‘நாக்’ தரவரிசை பட்டியலில் ‘ஏ’ மற்றும் ‘ஏ பிளஸ்’ தகுதி பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை வந்தது. அந்த அறிக்கையில், மாணவர்களுக்கு வினியோகம் செய்ய பகவத் கீதை நூல்களை பெற்றுக்கொள்ள வருமாறு கல்லூரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் பகவத் கீதை நூல்கள் யாரால் தானமாக வழங்கப்படுகின்றன என்பது குறித்து அறிக்கையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மராட்டிய அரசு, கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்தநிலையில் நாக்பூரில் நிருபர்களை சந்தித்த மராட்டிய கல்வி மந்திரி வினோத் தாவ்டே இது குறித்து கூறியதாவது:-

பகவத் கீதையை மாநில அரசு வினியோகம் செய்யவில்லை. தானேயில் உள்ள பிவண்டி பகவத் கீதா தொண்டு நிறுவனம் கல்லூரிகளுக்கு பகவத் கீதையை கொடையளிக்க முன்வந்தது. இதற்காக சில கல்லூரிகளின் பட்டியலை அவர்களுக்கு அரசு வழங்கியது.

ஒருவேளை யாராவது பைபிள் அல்லது குரான் உள்ளிட்ட புனித நூல்களை கல்லூரிகளுக்கு கொடையளிக்க விரும்பினால் அவர்களுக்கும் அரசு சார்பில் கல்வி நிறுவனங்களின் பட்டியல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்