தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 725 வழக்குகளுக்கு தீர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 725 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-07-14 22:45 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி தமிழ்ச்செல்வி தொடங்கி வைத்து விசாரணை மேற்கொண்டார்.

இதில் தலைமை குற்றவியல் நீதிபதி அகிலாசாலினி, முதன்மை சார்பு நீதிபதி விஜயலெட்சுமி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதாகிருஷ்ணன், நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதிகள் நாகராஜன், முனிக்குமார், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்பிரமணியன், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 8 ஆயிரத்து 448 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் வங்கிகளுக்கு வாராக்கடன் தொடர்பான 6 ஆயிரத்து 650 வழக்குகளில், 292 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.1 கோடியே 92 லட்சத்து 3 ஆயிரத்து 750 வசூல் செய்யப்பட்டது. இதேபோல் நீதிமன்ற நிலுவையில் இருந்த சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 798 வழக்குகளில் 433 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 9 லட்சத்து 32 ஆயிரத்து 576 வழங்கப்பட்டது.

இதன்படி தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 725 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலக ஓய்வுபெற்ற நிர்வாக உதவியாளர் தங்கராஜ்மாரியப்பன், இளநிலை நிர்வாக உதவியாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்