வேலை இல்லாமல் வறுமையில் வாடியதால் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

வேலை இல்லாமல் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் வறுமையில் வாடிய கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2018-07-15 23:20 GMT
காஞ்சீபுரம்,

சென்னையை அடுத்த பழவந்தாங்கல் பகுதியில் வசித்து வந்தவர் சரவணன்(வயது 40). இவருடைய மனைவி அனு என்ற அனிதா(35). இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

சரவணன், செங்கல்பட்டு அருகே ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலையில் இருந்து நின்று விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு வேறு வேலை எதுவும் கிடைக்காமல் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக அவர் வீட்டில் இருந்து வந்தார். அனிதாவும் வேலை இன்றி இருந்தார்.

சரவணனின் தாயார், ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர். அவருக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் வருகிறது. இதற்கிடையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரவணன், தனது காதல் மனைவியுடன் காஞ்சீபுரம் அடுத்த சாலவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தார்.

அவரது தாயார் மட்டும் சென்னை பழவந்தாங்கலில் வசித்து வருகிறார். தனது தாயாருக்கு வரும் ஓய்வூதியத்தில் இருந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு அதில் வாடகையை கொடுத்து, செலவுக்கும் வைத்து கொண்டார்.

கணவன்-மனைவி இருவருக்கும் வேலை இல்லாததால் குடும்ப செலவுக்கு பணம் இன்றி வறுமையில் வாடினார்கள். அத்துடன் அனிதா, சர்க்கரை நோயாலும் அவதிப்பட்டு வந்தார். காதல் திருமணம் செய்து கொண்டு 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாத ஏக்கம் வேறு அவர்களை வாட்டி வதைத்தது.

இதனால் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு ஒரே கயிற்றில் ஒரு முனையில் சரவணனும், மறுமுனையில் அனிதாவும் வீட்டின் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நேற்று முன்தினம் காலை நீண்டநேரம் ஆகியும் அவர்களது வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது வீட்டின் உள்ளே கணவன்- மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தூக்கில் தொங்கிய கணவன்- மனைவி இருவரின் உடல் களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்