கூட்டணி பற்றி கவலை கொள்ளாமல் சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தொண்டர்கள் தயாராக வேண்டும்

கூட்டணி குறித்து கவலை கொள்ளாமல் சட்டசபை தேர்தலுக்கு பா.ஜனதா தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

Update: 2018-07-16 00:20 GMT
அமராவதி,

அமராவதி சான்த் தயாநேஷ்வர் சான்ஸ்கிரிக் பவன் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் மத்தியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் கூட்டணி குறித்து நாம் கவலைகொள்ள தேவையில்லை. பிரதமர் நரேந்திர மோடியும், நானும் இந்த பிரச்சினையை ஒரு சுமூகமான முடிவுக்கு கொண்டுவருவோம். நம்பிக்கையுடன் இருங்கள்.

நண்பர்கள் அனைவரையும் நாம் உடன் அழைத்து செல்லவே விரும்புகிறோம். கூட்டணி குறித்து கவலை கொள்ளாமல் சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராகுங்கள்.

(வருகிற தேர்தல்களில் சிவசேனா தனித்து போட்டியிடும் என்று கூறியிருக்கும் நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இவ்வாறு பேசியுள்ளார்)

எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளை மறந்துவிட்டனர். ஆனால் நாங்கள் வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிட்டி கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கடன் தள்ளுபடி போன்றவற்றை செயல்படுத்தி வருகிறோம்.

காங்கிரஸ் கூட்டணி அரசை விட பா.ஜனதா மிக சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

ஒரு அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தால் அவர்கள் ஆட்சியில் இருக்கும் 5 ஆண்டு காலத்தை குறித்து மட்டுமே சிந்திப்பார்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அப்படி சிந்திப்பவர் இல்லை. அவருடைய பார்வை அதையும் தாண்டியது மற்றும் அவரது கொள்கைகள் நீண்ட காலத்தை குறித்ததாகும்.

இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். 

மேலும் செய்திகள்