குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

தரகம்பட்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-07-16 22:45 GMT
தரகம்பட்டி,

தரகம்பட்டி அருகே உள்ள அண்ணாநகர், நல்லாச்சிபட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் அருகே ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அதன்மூலம் நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. சில நாட்களாக அந்த நீரும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரியும் அண்ணாநகர் பஸ் நிறுத்தம் அருகே பாளையம்- திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன், சிந்தாமணிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பாளையம்- திருச்சி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்