சிறுமி திருமண விவகாரம்: வாலிபரை தாக்கிய விவசாயி கைது

திருப்புல்லாணி அருகே சிறுமி திருமண விவகாரம் குறித்து வீட்டிற்கு வந்து மகளிடம் தகராறு செய்த வாலிபரை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-17 21:45 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே உள்ள வைரவன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் ஆனந்த் (வயது 26). மைக்செட் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வண்ணாங்குண்டு பகுதியை சேர்ந்த விவசாயியின் மகளை கடந்த மார்ச் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். சிறுமி என்பதால் ராமநாதபுரம் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியில் வந்த ஆனந்த் நேற்று முன்தினம் சிறுமியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டினாராம். அங்கு சிறுமியின் மூத்த சகோதரி கதவை திறந்துள்ளார். ஆனந்தை கண்டதும் அவர் கதவை சாத்திவிட்டு விவசாய வேலைக்கு சென்றிருந்த பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த், சிறுமியின் மூத்த சகோதரியை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினாராம்.

அப்போது அங்கு வந்த சிறுமியின் பெற்றோரை பார்த்ததும், ஆனந்த் தப்பி ஓடிவிட்டாராம். அவரை விடாமல் துரத்திச்சென்ற பெற்றோர் கம்பால் தாக்கினார்களாம். அதில் படுகாயமடைந்த ஆனந்த் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதவி செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகள்