ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தரகம்பட்டி அருகே ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-07-17 23:00 GMT
தரகம்பட்டி,

தரகம்பட்டி அருகே ரெட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்சேவியர்ராஜ் (வயது 55). இவர் குளக்காரன்பட்டியிலுள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமலாவிண்ணரசி (45) அப்பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை பணி முடிந்ததும் வீட்டிற்கு அமலாவிண்ணரசி வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் உள்ளே சென்ற போது ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நன்கு நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தை மர்ம நபர்கள் அரங்கேற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நகை- பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்