திண்டிவனம் கல்லூரி விடுதியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திண்டிவனத்தில் உள்ள கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-17 22:16 GMT
திண்டிவனம்,

திண்டிவனத்தில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று காலை கல்லூரி சென்ற மாணவர்கள், மதியம் மீண்டும் விடுதிக்கு திரும்பினர். அப்போது, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் தலைமையிலான போலீசார் மற்றும் திண்டிவனம் ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஞானம் ஆகியோர் நேரில் சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு கிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து தனிதாசில்தார் ஞானம் கூறுகையில், அரசிடம் இருந்து நிதி பெற்று கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று மாணவர்களிடம் உறுதியளித்தார். மேலும் தற்போதுள்ள விடுதி கட்டிடம் பழுதடைந்து விட்டதால், புதிய கட்டிடம் கட்ட திட்டம் தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து, உணவை சாப்பிட்டனர்.

மேலும் செய்திகள்