பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கொடுக்கும் 16 பேருக்கு வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடுகள் கட்ட ஆணை

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கொடுக்கும் 16 பேருக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்ட ஆணைகளை காஞ்சீபுரம் கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

Update: 2018-07-17 23:50 GMT
காஞ்சீபுரம்,

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.100 கி.மீ. நீளத்தில் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு பணி முடிந்தது. இந்த அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் வளையக்கரணை கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கனவே வீட்டு மனைப்பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த திட்டத்துக்கு நிலம் கொடுக்கும் உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத்தை சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

நிலம் கொடுக்க இருப்பவர்களில் மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நில எடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நிலம் கொடுப்பவர்களுக்கு 3 மாதத்தில் வீடு கட்டி முடிக்கப்பட்டு, புதிய வீட்டில் குடியேறிய பின்னர் அவர்களின் வீடுகள் கையகப்படுத்தப்படும்.

உத்தேச மதிப்பீடு அடிப்படையில் தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம், மாமரத்துக்கு ரூ.16 ஆயிரத்து 600, கொய்யா மரத்துக்கு ரூ.10 ஆயிரத்து 20, தைல மரத்துக்கு ரூ.2 ஆயிரத்து 500, தேக்கு மரத்துக்கு வனத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு, அவர்கள் மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) நர்மதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்