காதல் திருமணம் செய்த பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை

சுவாமிமலை அருகே காதல் திருமணம் செய்த பெண் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், கணவரின் உறவினர் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது.

Update: 2018-07-18 23:15 GMT
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள சுந்தர பெருமாள் கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் நீலமேகம். விவசாயியான இவரது மகள் அனுசுயா(வயது 24). இவர் பி.டெக் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவரது வீட்டிற்கு எதிர் வீட்டை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் புகழேந்தி. இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு கேபிள் டி.வி.யில் வேலை பார்த்து வந்தார்.

புகழேந்தியும், அனுசுயாவும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர்.

இதனையடுத்து புகழேந்தி கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அனுசுயாவை தான் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை தன்னுடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது குறித்து விசாரிக்க அனுசுயாவின் தந்தை நீலமேகத்தை மகளிர் போலீசார் அழைத்து விசாரித்தனர்.

அப்போதுதான் தனது மகளின் திருமண விவரம் நீலமேகத்திற்கு தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த நீலமேகம் எதிர் வீட்டில் வசிக்கும் புகழேந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தகராறு செய்தார். இருவரது உறவினர்களும் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். இதனால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இந்த கோஷ்டி மோதலில் புகழேந்தியின் உறவினர்கள் சுரேஷ் குமார்(36), சுந்தரி(28), அபிராமி(28) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து அனுசுயாவின் தந்தை நீலமேகம் தனது மகள் அனுசுயாவை திட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த அனுசுயா நேற்று முன்தினம் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த நீலமேகத்தின் உறவினர்கள் எதிர் வீட்டில் வசிக்கும் புகழேந்தியின் சகோதரிகள் சுமதி, கோமதி மற்றும் உறவினர் வெள்ளையம்மாள் ஆகியோர் வீடுகளுக்கு தீ வைத்தனர். இதில் மூன்று வீடுகளும் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா ராணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்