மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு போலீசார் விசாரணை

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-07-18 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையை சேர்ந்தவர் பூபாலன். விவசாயி. இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 32). நேற்று அதிகாலை மகேஸ்வரி எழுந்து பால் கறந்து விட்டு வீட்டில் உள்ள மின்விளக்கு சுவிட்சை போட்டபோது, எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்