நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் மணல் திருட்டை கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் மணல் திருட்டை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

Update: 2018-07-18 22:45 GMT
காரியாபட்டி,

நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. நரிக்குடி மறையூர் கிருதுமால் நதி அருகே மணல் திருடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அனுமதி பெற்ற மணல் குவாரி போன்று ஜே.சி.பி.மூலம் இரவு நேரங்களில் மணல் திருடப்பட்டு ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்படுகிறது.

சமூக ஆர்வலர்கள் வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் சொன்னாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனிநபர் ஒருவர் அனைத்து தரப்பினரையும் சரிக் கட்டி மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் இதில் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


இதேபோல் திருச்சுழி பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், உடையனேந்தல், பனையூர் ஆகிய பகுதிகளிலும் மணல் திருடப்பட்டு வருகிறது. திருச்சுழி பகுதியில் இரவு நேரங்களில் அள்ளப்படும் மணல் அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்