பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட 5,880 வாக்குப்பதிவு எந்திரங்கள்

பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட 5,880 வாக்குப்பதிவு எந்திரங்கள் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

Update: 2018-07-18 22:35 GMT
பல்லடம்,

நாடாளுமன்ற தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூரு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து 6 வேன்கள் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வேன் ஒவ்வொன்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் 5,880-ம், 3 ஆயிரத்து 200 கட்டுப்பாட்டு எந்திரங்களும் கொண்டு வரப்பட்டது. இந்த வேன்களில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி பார்வையிட்டார்.

பின்னர் அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு பாதுகாப்பான அறையில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், திருப்பூர் கலால் உதவி ஆணையாளர் சக்திவேல், பல்லடம் தாசில்தார் அருணா, திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெயக்குமார், தேர்தல் தனி தாசில்தார் முருகதாஸ், திருப்பூர் உதவி ஆணையாளர் (கலால்) சக்திவேல், தேர்தல் துணை தாசில்தார் மயில்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டரிடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நடைபாதையில் பழக்கடை, பூக்கடை வைத்து வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வந்தார்கள். அந்த ஆக்கிரமிப்புகள் பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. அவர்கள் மீண்டும் அப்பகுதியில் கடைகள் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்டு கலெக்டர் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் கூறினார். 

மேலும் செய்திகள்