அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

செஞ்சி அரசு பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்ததையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-19 21:30 GMT
செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சிவராமன்(வயது 13). செஞ்சியில் உள்ள ராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த சிவராமன் கை, கால்களை கழுவுவதற்காக பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இருந்த தொட்டியில் தண்ணீர் எடுக்க முயன்றான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது பள்ளிக்கு வந்த மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்பறைகளுக்கு செல்லாமல் பள்ளி முன்பு ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் கழிப்பறை வசதி இல்லாததே சிவராமன் சாவுக்கு காரணம். எனவே உடனடியாக பள்ளிக்கு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலை மறியல் செய்வது சட்டப்படி குற்றம் என எடுத்து கூறி சமாதானம் செய்து பள்ளி வளாகத்துக்குள் அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்லாமல் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் கணபதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், மாணவர்களிடம் கூடிய விரைவில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தார். இதனை ஏற்ற மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைகளுக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்