11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை சார்பில் போராட்டம்

கிருஷ்ணகிரியில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை சார்பில் போராட்டம் நடந்தது.

Update: 2018-07-19 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கல்லூரி எதிரில், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கிளை சார்பில், இந்திய உயர் கல்வி ஆணையம் வரைவு சட்ட மசோதா திரும்ப பெறுதல், யு.ஜி.சி.யை காப்பாற்ற வேண்டுதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் முழக்க போராட்டம் நேற்று நடந்தது.

ஜேக்கின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி நடந்த இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநிலத் துணைத்தலைவர் சிவப்பிரியா தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சரவணன் பேசினார்.

இந்த போராட்டத்தின் போது, மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணையம் வரைவு சட்ட மசோதாவை திரும்ப பெற்று, யு.சி.ஜி. அமைப்பை காப்பாற்ற வேண்டும். உயர்கல்வி தனியார் மயமாக்கப்படுதலை தடுக்க வேண்டும். உயர் கல்விக்கான நிதி குறைப்பு, பல்கலைக்கழகம் மற்றும் அரசு நிறுவனங்கள் தன்னாட்சி மயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவாரியான தன்னாட்சி அதிகாரம் நீக்கப்படுவதோடு, தற்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் முன்மொழியப்பட்டுள்ள உயர்கல்வி நிதிவழங்கல் நிறுவனம் மற்றும் உயர்கல்வி திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டன.

தொடர்ந்து அடுத்த கட்டமாக ஆகஸ்டு 3-ந் தேதி பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டமும், டெல்லியில் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் பேராசிரியர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்