தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி சாவு

கிணத்துக்கடவில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் மோதி பெண் பலியானார்.

Update: 2018-07-19 22:45 GMT
கிணத்துக்கடவு,

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சுண்டக்காமுத்தூர் விவேகானந்தர்வீதியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 55). கோவை குளத்துப்பாளையம் நாயக்கர்வீதியை சேர்ந்தவர் ருக்குமணி (58). கூலித்தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்திற்கு கட்டிட வேலைக்காக மொபட்டில் சென்று கொண்டு இருந்தனர். மொபட்டை வெங்கடாச்சலம் ஓட்டினார்.

இவர்கள், கோவை -பொள்ளாச்சி மெயின் ரோடு ஏழுர் பிரிவு பஸ்நிறுத்தம் அருகே வந்த போது, கோவையில் இருந்து பழனி நோக்கி வந்த அரசு பஸ் வெங்கடாச்சலத்தின் மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் பின்னால் உட்கார்ந்திருந்த ருக்குமணி தவறி ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின்சக்கரம் ருக்குமணி மீது ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வெங்கடாச்சலத்திற்கு காயம் ஏற்பட்டது.

அதன்பிறகும் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டு இருந்த மற்றொரு மொபட் மீதும் மோதியது. இதில் அந்த மொபட்டை ஓட்டிவந்த செட்டிபாளையம் தேகாணியை சேர்ந்த ரவிகுமார் (40), நாகராஜன் (46) ஆகிய 2 பேரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்து ருக்குமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார், பழனி கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் கருப்புச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்