பொம்மிடி அருகே 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது

பொம்மிடி அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-20 22:30 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள வடசந்தையூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டுக்கு பின்புறம் உள்ள மரத்தில் நெல்லிக்காய் பறித்து கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு வந்திருக்கிறாள். அப்போது பெற்றோர் சிறுமியிடம் கேட்ட போது நடந்த சம்பவம் குறித்து சிறுமி தெரிவித்துள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அப்பாஸ் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அப்பாசின் அண்ணன் அஸ்லான் (23) என்பவர் அவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் பெற்றோர் பொம்மிடி போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் அரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அப்பாசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சிறுமியின் பெற்றோரை கண்டித்த அஸ்லானையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சிறுமியை அரூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்