மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது
திருவண்ணாமலையில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பே கோபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40), தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (34). பாலகிருஷ்ணன், அவரது மனைவி அமுதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் கத்தியால் அமுதாவை வெட்டியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அமுதாவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.