பந்தலூரில் தொழிலாளர்களின் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள் இழப்பீடு வழங்க கோரிக்கை

பந்தலூரில் தொழிலாளர்களின் வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தின. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Update: 2018-08-05 22:00 GMT

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா மழவன் சேரம்பாடி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, அய்யங்கொல்லி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதுடன், தொழிலாளர்களின் வீடுகளையும் இடித்து சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் காட்டு யானை ஒன்று மழவன் சேரம்பாடி பகுதியில் புகுந்தது. அப்பகுதியில் சிறிது நேரம் முகாமிட்டு இருந்த யானை, கூலி தொழிலாளியான தங்கையா (வயது 45) என்பவருடைய வீட்டை இடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கையா வீட்டின் வெளியே வந்தார். இதனை கண்ட அந்த யானை அவரை ஓட, ஓட விரட்டியது. இதனைதொடர்ந்து அவர் தனது வீட்டில் பதுங்கி கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த யானை அவரது வீட்டின் மேற்கூரையை சேதப்படுத்தியது. இதனால் பீதி அடைந்த தங்கையா மற்றும் அவரது குடும்பத்தினர் பீதியில் அலற தொடங்கினார்கள். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனால் அந்த யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதேபோல் சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.2–ல் கூலி தொழிலாளர்களான பாஸ்கரன், ராமசாமி ஆகியோரது வீடுகளையும் காட்டு யானை ஒன்று இடித்து சேதப்படுத்தியது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

மேலும் செய்திகள்