கார் மீது மராத்தா போராட்டக்காரர்கள் தாக்குதல் பா.ஜனதா பெண் எம்.பி. காயமின்றி தப்பினார்
மராத்தா போராட்டக்காரர்கள் கார் மீது நடத்திய தாக்குதலில் பா.ஜனதா பெண் எம்.பி. ஹீனா காவித் காயமின்றி தப்பினார். இந்த தாக்குதல் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மும்பை,
மராத்தா போராட்டக்காரர்கள் கார் மீது நடத்திய தாக்குதலில் பா.ஜனதா பெண் எம்.பி. ஹீனா காவித் காயமின்றி தப்பினார். இந்த தாக்குதல் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஹீனா காவித்
நந்துர்பர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஹீனா காவித். பா.ஜனதா பெண் எம்.பி.யான இவர் நேற்று பிற்பகல் துலே மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று இருந்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது, அங்கு நின்ற மராத்தா போராட்டக் காரர்கள் அவரது காரை வழிமறித்தனர். ஹீனா காவித்துக்கு எதிராக கோஷம் போட்டனர்.
திடீரென எம்.பி.யின் கார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கார் கண்ணாடி உடைந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டக் காரர்களிடம் இருந்து ஹீனா காவித்தை மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
16 பேர் கைது
கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் முழுவதும் போராடி வரும் மராத்தா சமுதாயத்தினர் நடத்திய இந்த தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
எம்.பி.யின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக போராட்டக்காரர் கள் 16 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.