சாயல்குடி அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கிணறு தோண்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலியானார்.

Update: 2018-08-06 23:15 GMT

சாயல்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சுடலைமாடன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே கிணறு தோண்டும் பணியில் குருசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது 25 அடி ஆழத்தில் குழி தோண்டிக்கொண்டிருந்தபோது, அவர் மீது மண் சரிந்து விழுந்தது. அதில் அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சாயல்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் சாமிராஜ் தலைமையில் சாயல்குடி மற்றும் முதுகுளத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் கிணற்றுக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து குருசாமியின் உடலை மீட்டனர். தகவலறிந்த சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோக்கின் ஜெரி உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்