சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து ரூ.1¾ லட்சம் பொருட்கள் திருட்டு

வீரப்பூரில் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-08-06 22:15 GMT
மணப்பாறை,

திருச்சி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீரப்பூரில் உள்ள கன்னிமாரம்மன் கோவிலுக்கு வந்து சாமிகும்பிடுவதற்காக சொகுசு காரில் வந்தார்.

பின்னர் அவர் கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றார். சாமி கும்பிட்ட உடன் ஊருக்கு செல்வதற்காக காரைநோக்கி வந்தார். அப்போது, காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

காருக்குள் பார்த்தபோது, அதில் இருந்த ஐபேடு, மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட ரூ.1¾ லட்சம் மதிப்பிலான பொருட்களும், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணமும் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்