கைதானவர்களை ஜாமீனில் எடுக்க போலி ரேஷன் கார்டுகள் தயாரித்த 6 பேர் கைது

குற்ற வழக்குகளில் கைதானவர்களை ஜாமீனில் எடுக்க போலி ரேஷன் கார்டுகள் தயாரி த்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-06 23:03 GMT
தானே,

தானே மாவட்டம் கல்யாண் கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 3 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டவர்களை ஜாமீனில் எடுப்பதற்காக அவர்கள் போலி ரேஷன் கார்டுகள், கிராம பஞ்சாயத்து போலி வரி ரசீது உள்ளிட்டவற்றை தயாரித்து கொடுத்து வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அவ்வப்போது போலி ரேஷன் கார்டுகள் மூலம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 150 பேரை ஜாமீனில் வெளியே எடுத்து இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த 51 போலி ரேஷன் கார்டுகள், 45 ரப்பர் ஸ்டாம்புகள், 318 கிராம பஞ்சாயத்து வரி ரசீதுகள், போலி ஆதார் அட்டைகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்