பாளையங்கோட்டையில் விபத்தில் 2–ம் வகுப்பு மாணவன் பலி

பாளையங்கோட்டையில் விபத்தில் 2–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2018-08-07 21:30 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் விபத்தில் 2–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

2–ம் வகுப்பு மாணவன் 

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மாரி மங்களம் (வயது 37). இவர்களுடைய மகன் மாரி விசுவ ஆனந்த் (7). இவன் மகாராஜநகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தான். இந்த நிலையில் நேற்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாரி விசுவ ஆனந்தை வழக்கமாக அழைத்து செல்லும் ஆட்டோ நேற்று வரவில்லை.

இதையடுத்து மாரி மங்களம் தன்னுடைய மகன் மாரி விசுவ ஆனந்தை ஸ்கூட்டரில் அழைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டார். சீனிவாச நகர் பகுதியில் சென்ற போது அந்த வழியாக சென்ற வாகனம் ஸ்கூட்டர் மீது மோதுவது போல் வேகமாக சென்றுள்ளது. இதனால் ஸ்கூட்டர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேரும் காயம் அடைந்தனர்.

பலி 

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தாய், மகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மாரி விசுவ ஆனந்த் பரிதாபமாக இறந்தான்.

இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்