ஊழியர் கொலை: எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கொன்றேன் கைதான உறவினர் வாக்குமூலம்

தளியில் தனியார் நிறுவன ஊழியர் கொலையில் கைதான உறவினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். எனது மனைவியுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-07 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

ஓசூர் ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் பிராங்கிளின் அருள்தாஸ் (வயது 46). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஹெலன் ஜாஸ்மின் (40). உனிசெட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரது அக்கா பேபி கிறிஸ்டியா (45). அவரது கணவர் ரவிக்குமார் (50) இவர்கள் தளி கும்பார தெருவில் குடியிருந்து வந்தனர்.

இந்தநிலையில் பேபி கிறிஸ்டியா கோபித்துக் கொண்டு தாயார் வீட்டுக்கு சென்ற அவர், பின்னர் தனது தங்கை ஹெலன் ஜாஸ்மின்வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் ரவிக்குமார் வீட்டுக்கு பிராங்கிளின் அருள்தாஸ் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில் ரவிக்குமார், பிராங்கிளின் அருள்தாஸ் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக ரவிக்குமாரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், எனது மனைவி கோபித்துக் கொண்டு பிராங்கிளின் அருள்தாஸ் வீட்டிற்கு சென்றார். இதனால் அவர் சமாதானம் பேச எனது வீட்டுக்கு வந்தார். அப்போது 2 பேரும் ஒன்றாக மது குடித்தோம். அப்போது எனது மனைவியுடன் பிராங்கிளின் அருள்தாஸ் கள்ளத்தொடர்பு வைத்திருந்தது தொடர்பாக கேட்டேன். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்து பிராங்கிளின் அருள்தாஸ் தலையில் கல்லை போட்டு கொன்றேன் என்று வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்