பழனியில் பக்தர்களிடம் நகைகளை பறித்த பெண்கள் உள்பட 8 பேர் கைது

பழனியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் நகைகளை பறித்த திருச்சியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-07 23:39 GMT
பழனி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவையை சேர்ந்த ராமராஜ் மனைவி ஈஸ்வரி (வயது 53). நேற்று முன்தினம் இவர் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்து இருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். அதேபோல் ஈரோடு காந்திநகரை சேர்ந்த கமலம் (74) என்பவர் அணிந்திருந்த நகையை 2 பெண்கள் பறிக்க முயன்றனர்.

அவர் கூச்சல் போடவும், அக்கம்பக்கத்தினர் அந்த பெண்களை பிடித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சி ராம்ஜி நகர் புங்கனூரை சேர்ந்த சுதா (40), ரமணி (45) என்றும், அவர்கள் ஒரு கும்பலாக வந்து பழனி அடிவாரத்தில் முகாமிட்டு, பக்தர்களிடம் நகை பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பழனி அடிவார பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகப்படும்படி நின்ற ஒரு காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள் திருச்சி ராம்ஜிநகர் புங்கனூரை சேர்ந்த லோகேஸ்வரன் (30), சசிதரன் (40), விக்னேஷ் (25), தினேஷ் (24), ரதி (32), அர்ச்சனா (35) என்றும், அவர்கள் ஏற்கனவே பிடிபட்ட 2 பெண்களுடைய உறவினர்கள் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கார் மற்றும் 8 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை பழனி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அதன்பின்பு சுதா உள்பட 4 பெண்களையும் நிலக்கோட்டை மகளிர் சிறையிலும், மற்ற 4 பேரை பழனி கிளைச் சிறையிலும் போலீசார் அடைத்தனர். 

மேலும் செய்திகள்