தனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து, 7 பேர் படுகாயம்

தனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2018-08-08 22:30 GMT

ராமேசுவரம்,

மத்திய பிரதேசம் மாநிலம் சினா என்ற இடத்தில் இருந்து ஓம்கார்சாகு (வயது 46) என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேருடன் திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் ஒரு சுற்றுலா வேன் மூலம் ராமேசுவரம் வந்தனர். ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றனர்.

இந்த வேனை திருப்பதியை சேர்ந்த செல்வக்குமார் ஓட்டி வந்தார். அப்போது எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலையில் குவிந்திருந்த மணலில் சிக்கி அந்த வேன் கவிழ்ந்தது. இதில் ஓம்கார்சாகு, சோபன்சாகு (38), வினய்(45), லதா(40), அபின்ஷா(15), ஆரோம்கா(14), பிரதேஷ்(14) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, திலகராணி, தனுஷ்கோடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், ரத்தினவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி பகுதியில் கடந்த இருதினங்களாக பலத்த காற்று வீசி வருவதால் எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலையை மணல் மூடியுள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க சம்பந்தபட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்