மனைவியை மீட்டுத்தரக்கோரி நீதிபதி குடியிருப்பு முன்பு எலக்ட்ரீசியன் தர்ணா

கும்பகோணத்தில் மனைவியை மீட்டுத்தரக்கோரி நீதிபதி குடியிருப்பு முன்பு எலக்ட்ரீசியன் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் குடும்பத்தை போலீசார் பிரித்து விட்டதாக கூறியதால் பரபரப்பு ஏற் பட்டது.

Update: 2018-08-08 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பிறம்பியம் மேலத்தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது38). இவர் எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். நேற்று கும்பகோணம் கச்சேரி சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்புக்கு தனது 2 மகள்களுடன் வந்த இளையராஜா திடீரென குடியிருப்பு முன்பு சாலையில் அமர்ந்தபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் தனது குடும்பத்தை பிரித்து விட்டதாக கூறிய அவர், தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை மீட்டு தர வேண்டும் என கோஷம் எழுப்பினார். மேலும் கல்லை எடுத்து தலையில் போட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதனால் அவருடைய மகள்கள் கதறி அழுதனர்.

இதையடுத்து அவரை கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சமாதானம் செய்து, அவரையும், அவருடைய மகள்களையும் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

என் மீது கும்பகோணம் போலீசார் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர். இதனால் என் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் நான் ஜாமீனில் வெளிவந்தபோது எனது மனைவி என்னையும், 3 மகள்களையும் விட்டுவிட்டு மாயமாகி விட்டது தெரியவந்தது.

நான் 3 மகள்களை வைத்துக்கொண்டு கடந்த 2 நாட்களாக எனது மனைவியை தேடி வருகிறேன். அவரை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதிபதி குடியிருப்பு முன்பு எலக்ட்ரீசியன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்